Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, April 14, 2011

மறுபடியும் ...

நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ப்ளாக்கர் பக்கம் வந்து பார்த்தால், "கடைசியாக 2007இல் இந்தப் பக்கம் வந்தீர்கள்" என்று பயமுறுத்துகிறார்கள். அவ்வளவு நாட்களா ஆகிவிட்டன? அடேங்கப்பா.

இனி மீண்டும் வருவேன். அவ்வப்போது.
|

Friday, November 23, 2007

பூனைக்குட்டி சகாப்தம் - 2



பல வருடங்களுக்கு முன்பு பூனை வளர்த்த கதையை விஸ்தாரமாக எழுதியிருந்தேன். இப்பொழுது மீண்டும் சில மாதங்களாக இரு feline creatures எங்கள் இல்லத்தையே இரண்டு படுத்திக்கொண்டிருக்கின்றன.


ஜெர்சி, ட்ரிசி (திரிபுரசுந்தரி) அகிய இவை இரண்டைப் பற்றிய ஒரு சிறிய வாழ்க்கைக் குறிப்பு (பெயரெல்லாம் அமர்க்களமாய்த்தான் வைத்தோம் - எப்படிக்கூப்பிட்டாலும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்):





வீட்டுச் சிலிண்டரின் கதகதப்பில் பெற்றுப்போட்டுவிட்டு அம்போவென்று அம்மா abscond ஆனபோது:










ஆகா, இரு சிறு ஜீவன்களுக்கு வாழ்வுகொடுத்துவிட்டுத்தான் போவோமே என்று மிகப் பெருந்தன்மையோடு இங்க் ஃபில்லர் சகிதமாக ஏகமாக ஆரோக்யா பால் கொடுத்ததில் மடியைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் ...



கொஞ்சம் விவரமறிந்து பேப்பரெல்லாம் கிழித்து, லேப்டாப் மேலெல்லாம் குதிக்க அரம்பித்தவுடன், நாங்கள் உட்காரும் நாற்காலியையெல்லாம் அன்னாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது ...





நிலைமை எவ்வளவு முற்றிவிட்டதென்றால், ஒரு ஃபோட்டோ எடுத்தால் கூட பயங்கரமாக போஸெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அரசிளங்குமரிகள் வளர்ந்துவிட்டார்கள் - ஆனந்தப் (horrifying) பெருமூச்சு. கோட்டான் பார்வையைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. Any ideas?

|

Tuesday, November 20, 2007

ஓமிஸ்வாமியும் மசாலாக்கரண்டியும்


ரொம்ப நாளாயிற்று ...

இந்த மாதிரி ஒரு பூரண மசாலாப்படத்தைப் பார்த்து.

['வலைப்பதித்து' என்று சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? அந்த சால்ஜாப்பெல்லாம் சொல்வதாக இல்லை. அப்புறம் அதற்கென்றே ஒரு பதிவு எழுத வேண்டியிருக்கும்.]

போன வாரம் ஓம் ஷாந்தி ஓம் படம் பார்த்தேன். ஸ்வர்ண சக்தி அபிராமி தியேட்டரை ஜிகுஜிகுவென்று வெல்வெட் குஷனெல்லாம் போட்டு கடைசி சீட்டுக்களை படுக்கையாக மாற்றியிருக்கிறார்களல்லவா, அதைப் பற்றி எழுதப்போயிருந்தேன். தியேட்டர் என்னவோ மஞ்சள்-சிகப்பு-பச்சை என்று 80க்ள்ளின் சினிமா டிஸ்கோவைப் பேய் பங்களா கெட்டப்பில் பார்ப்பதுபோல்தான் இருந்தது. ஆனால் படுக்கை-சீட் அமர்க்களமாக இருந்தது. ஷூவையெல்லாம் கழற்றிப்போட்டுவிட்டு ஹாயாகக் காலை நீட்டிக்கொண்டு, 'என்ன பெரிய படம்,' என்று நினைத்துக்கொண்டுதான் பார்க்க ஆரம்பித்தேன்.

பொதுவாக ஷா ரூக் கான் படங்களென்றால் யோசிக்கும் திறனையெல்லாம் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும் - தமிழ்நாட்டில் போலீஸாக வேலைபார்ப்பவர் பௌலர் ஹாட்டும் ஓவர்கோட்டும் அணிந்துதான் துப்பெல்லாம் துலக்கித் துப்புவார் என்ற எம்ஜிஆர் படத்தை ரசிப்பதுபோல்.

என்றாலும் நான் ஷாரூக் ரசிகை என்பதை வெட்கமெல்லாம் படாமல் intellectual அலட்டல் எதுவும் இல்லாமல் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். லலல்லா ... பாடல் ஒலிக்கும்போது, "கண்ணே, என் இதயம் உன்னுடையது," என்று தி.பாகவதர் கால வசனம் பேசும்போது பார்வையாளர்களை நிஜமாகவே உருக வைக்கும் திறமை மிகச்சிலருக்குத்தான் உண்டு. I salute the ultimate showman of today.

ஒரு முறை பார்த்துப் போதாமல் இன்னொரு முறை பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். [நான் முதல் முறையே தியேட்டர் செல்லும் ரகம் இல்லை.] 70க்களில் சினிமா விஸ்வரூபம் அடைந்திருந்தபோது மீண்டும் மீண்டும் தியேட்டரை மொய்த்துப் படம் பார்த்து, அந்த மாய உலகின் மோகத்தில் மூழ்கியவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பது நன்கு புரிந்தது. அந்தக் கனவுலகம், the sheer screen magic of it ... அதை இந்த ஓவர்டோஸ் matrix உலகத்தில் என்றாவது அனுபவிக்க முடியுமா என்று ஏங்கிய காலம் உண்டு. OSO அந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தது.

த்சோ, இன்னொரு OSO விமர்சனமா என்று அலுப்புத்தட்டும் பட்சத்தில் you have been warned: இதோடு கிளம்பலாம்.

ஔவையே! OSOவில் உனக்குப் பிடித்தவைகளை ஒன்று, இரண்டு, மூன்று, என்று வரிசைப்படுத்திப் பாடு என்று கேட்டால், பாடாமல் என்னால் சொல்லக்கூடியவை:

1. சதாகாலமும் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் frame by frame அதைக் கட்டிக்கொண்டு அழாமல், ஒரு வித்தியாசத்திற்கு நம்மூர் பாலிவுட்டை [அதுவே பலவிஷயங்களில் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனாக இருந்த போதிலும்]அதன் கோட்டை, கொத்தளம், கத்தி, கபடா, பெல்பாட்டம், தொங்கு மீசை, லெதர் பாண்ட், டென்னிஸ் ஆடும் பெண்கள் என்று கலக்கோ கலக்கு என்று கலக்கிப் பாயசமாக்கியதற்கு.

2. சாபு சிரிலின் ஆர்ட் டிரெக்ஷன். 70க்களின் ஓம் தன் இதய நாயகி ஷாந்திப்ரியாவின் போஸ்டரை நோக்கிக் காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருக்கும் பில்போர்டுகள், Palmer's Biscuits, Ovaltine, Dulux Paints போன்ற விளம்பரங்களை தத்ரூபமாகக் காட்டுகின்றன. பழைய பைண்ட் புத்தகங்களில் தொடர்கதை படிக்கும்போது அவற்றைப்பார்த்த நினைவு பளிச்சிடுகிறது.

3. ஓம் பிரகாஷ் மகிஜாவாக வரும் ஷா ரூக். இவரது படங்களின் பொதுவான குற்றச்சாட்டு - எப்போதும் அவர் ஷா ரூக்காகத்தான் இருக்கிறாரேயொழிய, கதாபாத்திரமாக மாறுவதில்லை என்பது. இந்த ஒரு இடம் மட்டும் விதிவிலக்கு. பல்லைக் கடித்துக்கொண்டு முன்னேறியதாலோ என்னவோ, கண்களில் கனவு வழிய சினிமாவில் வாய்ப்பு வேண்டி அலையும் இளைஞனின் ஏக்கத்தைப் உண்மையிலே உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். பின் பாதியில் brat-star ஆக வருவதெல்லாம் OK OK தான்.

4. எல்லோரும் ஏற்கனவே பாராட்டியிருக்கும் Filmfare Awards பகுதி. இந்த 'ரா'ஜையும் 'ராகு'லையும் இன்னும் எவ்வளவு நாள்தான் கட்டிக்கொண்டு அழுவார்கள் என்று ஃபாரா கான் எத்தனை முறை தலையில் அடித்துக்கொண்டாரோ?

5. எல்லோரும் சரமாரியாக criticise செய்திருக்கும் பூர்வஜென்மம்-மறுபிறப்பு பகுதி. எனக்குப் படத்தின் ஹைலைட்டே இதுதான் என்று தோன்றியது. 'இந்தக் காதல் நிறைவேறாது' என்று தெரிவதனால்தான் Main agar kahoon பாடலில் அத்தனை சோகமும் இனிமையும் கூத்தாடுகிறது.

6. அந்த 31 ஸ்டார் அணிவகுப்புப் பாடல். பாடல் சுமார் ரகம்தான். ஆனால் பாடலின் கடைசியில் சைஃப், சல்மான், ஷா ரூக், சஞ்சய் தத் எல்லோரும் சேர்ந்து டேபிளின் மேல் ஆடும் பகுதி - ஷா ரூக்கின் முகத்தில் இருக்கும் ஒருவித மலர்ச்சி கலந்த ஆச்சர்யம். ஷா ரூக் கான் என்ற ஒரு புயல் வேக phenomenonஐக் கொண்டாடுகிறார்கள் அவர்கள். 'இதெல்லாம் நமக்கா? நிஜமாகவே இந்தத் திரையுலக பயில்வான்களைக் கட்டியிழுக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டோமா? இவர்களெல்லாம் நமக்காகத்தான் இங்கே வந்து ஆடுகிறார்களா?' என்ற ஒருவித மலைப்பு அவர் முகத்தில் வந்து வந்து போகும். பாடல் முழுவதும் அவர்களையே பார்த்துக்கொண்டு ஏறக்குறைய வாய் பிளந்தபடி நின்றுகொண்டிருப்பார்.

7. க்ளைமாக்ஸ் பாடல். அதைப் படமாக்கியிருக்கும் விதம். பழைய நினைவுகளையும் ஷாந்திப்ரியா பரிதாமாக இறந்துபோனதையும் கவிதை கலந்த குரூரத்துடன் சொல்லியிருக்கும் அழகு ... இந்த ஒரு பாடலுக்காக இன்னும் பத்து முறை OSO பார்க்க நான் தயார்.

8. அர்ஜுன் ராம்பால் இத்தனை நாள் எங்கிருந்தார்? ஏன் யாரும் இதுவரை இப்படியொரு அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை?

9. படுகோனே படு க்ளாமராக வந்து கன்னம் குழிவிழ நம்மை அள்ளிக்கொண்டு போகிறார். Dhoomtana பாடலில் பழையகால டப்பாங்குத்து தமாஷாக இருக்கிறது. கடைசிக்காட்சியில் வில்லனை ஒழித்த பிறகு ஷா ரூக்கை துக்கமும் காதலும் கலந்து கண்களில் கண்ணீர் வழிய ஒரு பார்வை பார்க்கிறாரே ... Dreamy Girl பட்டம் மிகப்பொருத்தம். எதிர்காலத்தில் இதைவிட லாஜிக் குறைந்த பல படங்களில் பிகினியில் வந்து, 'பாதகா, விடு என்னை,' என்று சுத்த இந்தியில் பல வசனங்கள் பேசி ஹீரோவின் கையில் தொப்பென்று விழும் சப்பைப் படங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

10. Shreyas Talpade. இக்பால் படத்தில் நடித்த அதே ஆள்தானா என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. Wow.

OSOவின் மற்ற விமர்சனங்களைப் படித்தபோது கண்ணை உறுத்திய ஒரு விஷயம்: ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் 'இது வெறும் தமாஷ்தான்,' 'ஒண்ணும் கலை வளர்க்கும் படமெல்லாம் இல்லை, இருந்தாலும் ஏதோ பரவாயில்லை,' என்றெல்லாம் சொல்லிவிட்டு அப்புறம் விமர்சனத்திற்குத் தாவியிருக்கிறார்கள். எப்போதுமே ஒரு படம் கலைவளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்று புரியவில்லை. கலைப்புலிகளாக தங்களை இவர்கள் நினைத்துக்கொள்வது எதற்கு என்றும் புரியவில்லை. மிக உயர்ந்த சினிமா ஒரு புறம் இமயமலைச்சிகரத்தில் இருக்கட்டும். OSO போன்ற படங்களுக்கும் இங்கே இடம் உண்டு. This is pure entertainment. கட்டக்கடைசியில், எது நிஜவாழ்வின் கஷ்டங்களை மறக்கடித்து கற்பனை உலகிற்கு நம்மை இழுத்துச் செல்கிறதோ, அதுதான் ஜெயிக்கும்.

Paisa Vasool, yaar.

Labels: , ,

|

Saturday, January 20, 2007

"ஆரார் ஆசைப்பட்டால் என்ன ...?"

சென்னையின் இசை விழாவில் முழுகி நனைந்து இப்போதுதான் வெளியே வந்து மூச்சிழுக்கிறேன். மற்ற வருடங்களில் செய்யாத ஒரு சில (சிறிய) விஷயங்களை இந்த வருடம் செய்ய முடிந்தது. உதா: அலுவலகத்தையும் தாண்டி எப்படி கச்சேரிகளுக்குச் சென்று வருவது என்று திட்டமிடுதல். எந்த ப்ளானும் இல்லாமல் ஒரு விஷயத்தில் தடாலென்று இறங்குவதுதான் எப்போதும் கை கொடுக்கிறது என்பதற்கு டிசம்பர் 2006 மற்றொரு எடுத்துக்காட்டு.

அப்படி ஒரு "புதிதாகச் செய்யும் முயற்சி"யில்தான், கலாஷேத்ராவிற்குச் சென்றேன். இரண்டு மூன்று நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்தேன். கூடவே, "கூர்மாவதாரம்" நிகழ்ச்சிக்கு முன், அவர்களுடைய கேரள பாணி "கூத்தம்பலம்" அரங்கில், பிரசன்னா ராமஸ்வாமியின் "ஆரார் ஆசைப்படார்" short filmஐயும் பார்க்க நேர்ந்தது.

மாலை ஐந்து மணி. வெளியே மரங்களின் 'மரமர' சப்தம். கொசுக்கள் ரீங்காரமிட்டன. அவற்றை விரட்டும் சாம்பிராணிப் புகையின் நறுமணம். சற்று கண்ணை மூடினால் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி வந்துவிட்ட பிரமை தட்டுகிறது. Ambienceஇல் தூக்கியடிக்கிறார்கள்.

படம் ஆரம்பித்தவுடன், சஞ்சய் சுப்ரமணியத்தின் அற்புதக் குரல் சில நிமிடங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது. நளினமான இசை.

அதற்கப்புறம் கொட்டாவி வருவதைத் தடுக்க முடிவதில்லை.

பாடகர், குழந்தைக்கு அன்பான அப்பா, கணவர், வயது முதிர்ந்த இசைக்கலைஞரிடம் பாட்டுக் கற்றுக்கொள்ளும் பணிவான மாணவர் என்று சஞ்சயின் வெவ்வேறு பரிமாணங்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். புரிகிறது. அவர்களது முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் ... இயற்கையாக எடுக்கிறேன் என்ற பெயரில் கேமரா ஓவராக ஆடுவதாகத்தான் எனக்குப் படுகிறது. இயல்பான வாழ்க்கையைக் காட்டுவதாகச் சொல்லி சஞ்சயின் மனைவி தோசை வார்ப்பதைப் பதினைந்து நிமிடம் படமெடுக்க வேண்டிய அவசியம் புரியவில்லை.

தன் இசை, அவரது அனுபவங்கள், அவர் தன் துறையைப் பார்க்கும் விதத்தைப் பற்றியெல்லாம் சஞ்சய் விவரிக்கும் இடங்கள் மிக நன்றாக இருக்கின்றன. கண்களை உருட்டி உருட்டி அவர் இன்வால்வ் ஆகி மூழ்கிப்போவது மிக சுவாரசியமாக இருக்கிறது. உடனேயே அவர் ஜன்னல் பக்கம் நின்று தெருவை வேடிக்கை பார்க்கிறார். ஆழ்ந்த இசைத் தியானத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம் - ஆனால் பார்க்கும் நமக்கு அந்த உணர்வு வரவில்லை. தப்பாக எடிட் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம்தான் வருகிறது. பின்னால் ஒரு தாமரை மலர்வதாக (பழைய சிவாஜி படத்திலெல்லாம் காண்பிப்பார்களே) ஒரு காட்சி. Subtlety, where art thou? தமாஷாக இருந்தது.

சஞ்சய் பாடிக்கொண்டே இருக்கிறார். குழந்தையுடன் விளையாடுகிறார். திடீரென்று காருக்குள் இருக்கிறார். ஒரு சமயம் வாய் மட்டும் தெரிகிறது. பாட்டுக் கற்றுக்கொள்கிறார் (அவரது பணிவும் பக்தியும் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கின்றன.) வாயில் எதையோ குதப்புகிறார்.

பிய்த்துப் பிய்த்துப் பல காட்சிகள். இதுதான் டாக்குமெண்ட்ரி ethicஸோ என்னவோ. ரோட்டில் போகும்போது குலுக்கிப்போடும் தெருக்குழிகளை நினைவுபடுத்துகின்றன பல காட்சியமைப்புக்கள். சஞ்சய் என்ற அற்புதப் பாடகரின் பல முகங்களைக் காட்ட முயன்றிருக்கிறார்கள் ... சஞ்சய் என்ற தனிப்பட்ட மனிதரின் sheer charisma படத்தை ஓட்டுகிறது. மற்றபடி?

ஒரு பெரிய பங்களாவையே திறந்து காட்டுகிறேன் என்று ஆசை காண்பித்துவிட்டு, கதவிடுக்கில் சிந்தும் ஒளியை மட்டுமே மீண்டும் மீண்டும் focus செய்திருக்கிறார்கள். Rather disappointing.

Labels: ,

|