Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, July 21, 2004

ஒரு அழகியும், ஆயிரம் கப்பல்களும்


"ஒண்ணு, நாங்க பொண்ணுக்கு அடிச்சுக்குவோம்; இல்ல, மண்ணுக்கு அடிச்சுக்குவோம்," என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும்.

மூன்று மாதங்களுக்கு முன்பாக இருந்தால் என்ன? மூவாயிரம் வருடம் முன்பு இருந்தால்தான் என்ன? இப்போதும், அப்போதும் - எப்போதும் - இந்த இரண்டு விஷயங்களுக்குத்தான் மனிதர்கள் அடித்துக்கொண்டு சாகிறார்கள்.

ஒரு தேவனும் தேவதையும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அதைக் கொண்டாட மிகப்பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். ஊர் பேர் தெரியாதவர்களெல்லாரும் 'All are welcome' ரீதியில் கலந்துகொண்ட அந்த விருந்தில், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பில்லை - அது எரிஸ். மனிதர்களுக்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தேவதை (அதனால்தான் அழைக்கவில்லை.). எரிஸ் மகா எரிச்சலோடு ஒரு காரியம் செய்தாள் - அழகான தங்க ஆப்பிள் ஒன்றை உருவாக்கி, அதில் 'மிக அழகானவளுக்கு உரியது' என்று கிறுக்கி, அருவமாக விருந்தில் நுழைந்து, விருந்தினர்களிடையே உருட்டிவிட்டாள்.

விருந்துக்கு வந்திருந்த மூன்று தேவதைகளுக்குள் சண்டை தொடங்கியது. ஆளாளுக்கு 'அழகுப்போட்டியில்' வெற்றி வாகை சூடத் துடிக்க, விஷயம் முற்றிப்போய், 'நாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இளவரசன் ஒருவன் (உங்களுக்காகவே வேலையற்று) இன்ன மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான் (அவன் பிறந்தபோது, 'நாடு இவனால் அழியும்' என்று அசரீரி ஒலித்ததால் அவசரமாக மூட்டை கட்டி மலையேற்றிவிட்டார்கள் அரசரும் அரசியும்.)- அவனைப் போய்ப் பார்த்தால் பிரச்சனை திரும்' என்று யாரோ சொல்லிவைக்க, புறப்பட்டார்கள் முப்பெரும் தேவியர். அவனிடம் சென்று, 'எங்களில் அழகி யார்? நேர்மை, தர்மம், நியாயம் இன்னபிற வழி வகையைத் துணையாக கொண்டு, சரியான முடிவு கூறவும்," என்று வேண்டிக் கேட்டுக்கொண்டனர். வேண்டிக் கேட்டுவிட்டு,'விதி விட்ட வழி' என்று சும்மா இருந்துவிடாமல், ஆளாளுக்கு ஏற்ற மாதிரி, பெரிய லெவலில் லஞ்சம்.

ஒருத்தி, "நான் உனக்கு அறிவும், போர்த்திறமையும் தருகிறேன்" என்றாள். இன்னொருத்தி, "ஆசியாவையே தருகிறேன்" என்றாள். கடைசி தேவதை இருப்பவர்களுக்குள் அழகியோ இல்லையோ, கெட்டிக்காரி. "உலகின் மிக அழகான பெண்ணின் காதலை உனக்குப் பெற்றுத் தருகிறேன்," என்று கண்ணைச் சிமிட்டினாள்.

இளவரசன் புரண்டு புரண்டு, நின்று, நடந்து, உட்கார்ந்து, தலைகீழாய்த் தொங்கி - யெல்லாம் யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல், 'பட்'டென்று, "அழகி நீயே. எங்கே எனக்குரியவள்?" என்றான்.

தோற்றுப் போன சகோதரி தேவதைகளை ஏளனமாகப் பார்த்துவிட்டு, ஒய்யாரமாகக் கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்ட காதல் தேவதை காட்டிய பெண் - ஹெலன். ஸ்பார்ட்டாவின் மன்னன் மெனலேயஸ்ஸின் மனைவி. பின்னாளில் 'The face that launched a thousand ships' என்று பாடல் பெறப்போகிறவள். (அப்படிப் பாடல் பெற்று அவள் என்ன சுகத்தைக் கண்டாள்? ஒன்றுமில்லை.)

வரம் கொடுத்த காதல் தேவதை - கிரேக்க தேவதை Aphrodite. "அழகிய பெண்ணா? அம்புட்டுதான்," என்று அழகிப் பட்டம் கொடுத்த இளவரசன் - பாரிஸ். 'ட்ராய்' நகர மன்னரின் இரண்டாவது மகன். அவன் பிறந்த போது ஒலித்த அசரீரி பொய்க்கவில்லை. மாபெரும் ட்ராய் நகரம் பத்து வருடப் போருக்குப் பிறகு, அழிந்து மண்ணோடு மண்ணாகியது - ஹெலனை அவன் அழைத்து வந்த காரணத்தால்.

மற்றது...?

ஹெலனின் கணவனும், அவனது அண்ணனும் ட்ராய் வரை துரத்திக்கொண்டு போவதும், ஹெலன் மணமுடித்த போது, 'இவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ, அவளது கணவன் உதவி கோரினால், செய்து தர வேண்டும்," என்று ஒப்பந்தம் செய்து கொண்ட மற்ற கிரேக்க மன்னர்களூம், Achilles தலைமையில் முற்றுகை இடுவதும், பத்து வருடம் போர் செய்வதும், கடைசியில் யுலிஸ்ஸிஸின் யுத்த தந்திரம் பயன்படுத்தி, ட்ராய் நகருக்குள் மரக்குதிரையில் நுழைவதும்...

'ட்ராய்' படம் பார்த்ததன் விளைவு, பழைய கதையை நோண்டிகொண்டே சென்றதில், இத்தனை தகவல்கள் அகப்பட்டன. இருப்பதிலேயே சுவாரசியமான விஷயம் - Achillesஇன் பாதத்தில் அம்பு பட்டு அவன் இறப்பது. Achilles heel என்னும் பிரயோகம் தெரியும். எதனால் இந்த கிரேக்க கதாபாத்திரத்துக்கு இப்படி ஒரு விசித்திர வரம் என்று புரட்டியதில்...நம் மகாபாரதம் ரேஞ்சில், துரியோதனனின் தாய் காந்தாரி, அவனுக்கு சர்வ சக்தியும் கொடுக்க, தன் பார்வையால் அவனை ஊடுருவ...(தொடையைத் தவிர்த்து - அதனால்தால் அவன் பீமனின் கதையால் இறக்கிறான்)அதேபோல், அகிலீஸ்ஸின் அம்மாவும் அவனைப் பாதுக்காக்க (இவன் பிறக்கும்போது ஒரு அசரீரி 'ட்ராய் போரில் இறப்பான்' என்று ஒலித்து தொலைப்பதால் - அந்தக் காலத்தில் எவ்வளவு அசரீரி! உள்மனதின் குரலைத்தான் அசரீரி என்றார்களோ?) அவனை ஸ்டிக்ஸ் நதியின் தண்ணீரில் முக்கி எடுக்கிறாள். பாதத்தைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறக்குவதால், உயிர் காக்கும் சக்தியைகொடுக்கும் அந்த நீர், அகீலிஸ்ஸின் உடல் முழுவதும் நனைப்பதில்லை. அசரீரியின் வாக்குப் படி, ட்ராய் போரில் இறந்தும்போகிறான்.

இத்தனையும் நடந்து, ட்ராய் நாசமாகி, ஆயிரக்கணக்கில் வீரர்களும், பெண்களும், ட்ராய் நகர மக்களின் ஆதரவைப் பெற்ற இளவரசன் ஹெக்டரும் செத்து, 'போதுமடா சாமி இந்தப் போரும் மண்ணாங்கட்டியும்," என்று கிரேக்க மன்னர்களே உச்சு கொட்டிய பிறகு, ஹெலன் என்ன ஆனாள்...?

போரில் பாரிஸ் இறக்க, ஹெலன், அவனது சகோதரனின் மனைவியாகிறாள். அப்புறம் அவளது பழைய கணவன் மெனலேயஸ் இவனையும் கொன்றுவிட, 'கடனே' யென்று அவனுடன் திரும்பிச் செல்கிறாள். அவளை அவளது மகனே பின்னாளில் விரட்டிவிடுகிறான் - என்கிறது ஒரு version.

'ஆயிரம் கப்பல்களைச் செலுத்திய அழகிய முகம்'...கடைசியில் இப்படித்தான் முடிகிறது. ஹ்ம்.

|